கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஜம்புகேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோயிலில் நேற்று குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் நவகிரகங்களுக்கு நடுவில் நாயகமாக வீற்றிருக்கும் குரு பகவானுக்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஜம்புகேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் மற்றும் நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராசி மற்றும் நட்சத்திரங்களின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் ஆலய அர்ச்சகர் செய்திருந்தார்.