சென்னை: கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் பன்னோக்கு மருத்துவமனை மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. ஜூன் 3ம் தேதி கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைத்து திறக்க திட்டமிடப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.
முதலில் ஜூன் 5ம் தேதி மருத்துவமனையை திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜனாதிபதி செர்பிய நாட்டிற்கு சென்றதால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஜனாதிபதியின் தேதியை பெற்று ஜூன் 15ம் தேதி மருத்துவமனையை திறக்க அரசு சார்பில் முயற்சி செய்யப்பட்டன. ஆனால், ஜனாதிபதி மாளிகையில் இருந்து இதுவரை மருத்துவமனை திறக்கும் நிகழ்ச்சிக்கு தேதி ஒதுக்கப்படவில்லையென தகவல் வெளியானது. இந்நிலையில், கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.