Saturday, May 11, 2024
Home » ராகுலுக்கு சிறை தண்டனை விதித்தவர் உட்பட 68 குஜராத் நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராகுலுக்கு சிறை தண்டனை விதித்தவர் உட்பட 68 குஜராத் நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

by Suresh

புதுடெல்லி: அவதூறு தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா உட்பட 68 கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மோடி எனும் சமூகத்தின் பெயர் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்துக்காக அவர் மீது குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு அண்மையில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா தீர்ப்பளித்தார். இந்த நிலையில் வர்மா உட்பட குஜராத் மாநிலத்தை சேர்ந்த 68 கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மாநில அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மூத்த சிவில் நீதிபதி கேடர் அதிகாரிகளான ரவிக்குமார் மஹேதா மற்றும் சச்சின் பிரதாப் ராய் மேத்தா ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் பதவி உயர்வு அளிக்க தடையில்லை என கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

மேற்கண்ட குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவாது நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமைர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘மொத்தம் 68 கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கிய விவகாரத்தில், குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பதவி உயர்வு வழங்கப்பட்ட உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து நிறுத்தி வைக்கப்படுகிறது. இதில் பணிமூப்பு மற்றும் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரையின் அடிப்படையில் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான பதவி உயர்வை அமல்படுத்தியது சட்ட விரோதமானது ஆகும். மேலும் பதவி உயர்வுக்கு தடை விதிக்கப்பட்ட அனைவரும் அதாவது 68 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் பழைய பதவியிலேயே தொடர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அம்மாநில நீதித்துறையும், அரசும் மேற்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

fifteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi