அகமதாபாத்: மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவுக்கு இம்முறை பாஜ கட்சி குஜராத்தின் ராஜ்கோட் தொகுதிகளில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. இதனால் தலைகால் புரியாமல் இருக்கும் அமைச்சர் பர்சோத்தம், வழக்கமான பாஜ தலைவர்களைப் போல பிரசாரத்த்தில் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார். ‘ஆங்கிலேயர்கள் மற்றும் பிற அந்நிய ஆட்சியாளர்கள் துன்புறுத்தலுக்கு இந்திய மன்னர்கள் அஞ்சி நடுங்கி அடிபணிந்தனர். சில, அந்நிய ஆட்சியாளர்களுக்கு தங்கள் சொந்த மகளை திருமணம் செய்து கொடுத்தனர்’ என இஷ்டத்திற்கு அளந்து விட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த பேச்சால், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்களான ராஜ்புத் பிரிவினர் கடும் கோபம் அடைந்துள்ளனர். பர்சோத்தமை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என ராஜ்புத் பிரிவினர் கண்டிப்புடன் கூறி உள்ளனர். ராஜ்கோட்டில் ராஜ்புத் பிரிவினர் ஓட்டு அதிகம் என்பதால் அவர்களை பகைத்துக் கொண்டு ஜெயிக்க முடியாது என்பதை பாஜ அறிந்துள்ளது. இதனால் அவர்களை சமாதானப்படுத்தும் கூட்டம் அகமதாபாத்தில் நேற்று நடந்தது . இது குறித்து சமாதான தூது சென்றவர்களில் ஒருவரான பாஜ தலைவர் பூபேந்திரசின் சுதாசமா கூறுகையில், ‘‘இதுவரை 4 முறை ரூபாலா தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டு விட்டார். அப்படியிருந்தும் ராஜ்புத் தலைவர்கள் இறங்கி வர மறுக்கின்றனர்’’ என்றார்.