புதுடெல்லி: குஜராத் முதல்வராக நான் பதவியேற்கும் போது, எனக்கு எந்தவொரு நிர்வாக அனுபவமும் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பாஜகவில் புதிய முகங்களை முதல்வராக தேர்வு செய்வது என்பது முதல் முறையல்ல. அதற்கு மிகப்பெரிய உதாரணம் நானே உள்ளேன். குஜராத் முதல்வராக நான் பதவியேற்கும் போது, எனக்கு எந்தவொரு நிர்வாக அனுபவமும் இல்லை. அப்போது நான் சட்டப் பேரவைக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் புதிய முகங்கள் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பாஜகவுக்கு புதிய நடைமுறை ஒன்றுமல்ல.
அரசியல் களத்தில் பல்வேறு சோதனைகளை பாஜக செய்து வருகிறது. ஒரே நேரத்தில் பலரை வளர்க்கும் திறன் பாஜகவுக்கு உள்ளது. தேசிய தலைவர்களாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு முறையும் புதிய நபர்களை பார்க்க முடியும். குஜராத் அமைச்சரவை மற்றும் டெல்லி மாநகராட்சிக்கு புதிய முகங்களை தான் கட்சி தேர்வு செய்தது. புதிய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்குவது ஜனநாயகத்தில் இன்றியமையாதது. பாஜக என்பது ஜனநாயக ரீதியிலான கட்சியாகும். சொந்த பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி அல்ல. அதனால்தான் பாஜக ஆட்சியமைத்த மூன்று மாநிலங்களிலும் புதிய முகங்கள் முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டன’ என்று கூறினார்.