குன்றத்தூர்: மாங்காடு அருகே பட்டூர் கூட்டு ரோடு பகுதியில் ஒரு மளிகை கடையில் குட்கா போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆவடி காவல் துணை ஆணையர் அய்மண் ஜமால் மற்றும் மாங்காடு போலீசார், நேற்று பட்டூர் கூட்டு ரோடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மளிகைக் கடையில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரை, போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 55 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த கடையின் உரிமையாளர் செந்தில்குமார் (44) என்பவரை கைது செய்து, கடையை பூட்டி சீல் வைத்தனர்.