சென்னை: உலக மகளிர் நாளையொட்டி வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: நூற்றாண்டு நூற்றாண்டுகளாக தமக்கு விதிக்கப்பட்ட மடமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியேறி, புத்துலகின் சிற்பிகளாக மிளிர்ந்திட உலக மகளிர் நாளில் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகள்.
உங்களின் சமூக – பொருளாதார ஏற்றத்துக்கும், அரசியல் பங்கேற்புக்கும் அடித்தளம் அமைத்து ஊக்குவிக்கவும், எல்லா நிலைகளிலும் உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்தான் நமது திராவிட மாடல் அரசு எண்ணற்ற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களைத் தீட்டி வருகிறது. சொற்களால் அல்லாமல், பெண்களை சக மனிதர்களாக, சமவுரிமை கொண்டவர்களாக மதிப்பதன் வழியே அவர்களை போற்றும் தலைமுறை உருவாகிட உழைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.