அரியலூர்: கோர்ட்டில் ஆஜராகாத திரைப்பட இயக்குனர் கவுதமனுக்கு அரியலூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இப்பகுதியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கவுதமன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று அவருக்கு நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.