Saturday, June 1, 2024
Home » கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!!

கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!!

by Suresh
Published: Last Updated on

மதுரை: சித்திரை திருவிழாவில் இன்று அதிகாலை 5.51 மணிக்கு அழகர், வைகையாற்றில் இறங்கினார். இதில் பங்கேற்க மலையில் இருந்து நேற்று மதுரை மூன்றுமாவடிக்கு வந்த அழகருக்கு நடந்த எதிர்சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவாக சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வுக்காக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக கள்ளழகர் வேடம் புரிந்து, தங்கப்பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.

கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல், வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

நேற்று அதிகாலை மூன்றுமாவடிக்கு வந்த கள்ளழகரை, மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து புதூர், ரிசர்வ்லைன், தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்தார்.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தங்கத்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டு, வழியில் உள்ள கருப்பண சுவாமி கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் அதிகாலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கினார்.

அழகரை தெற்குமாசி வீதி வீரராகவப்பெருமாள் வரவேற்றார். வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்பு வழிநெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை சென்றடைகிறார்.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொள்ள மதுரை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் நேற்று மாலை முதலே மதுரையில் குவிந்துள்ளனர்.

* பாதுகாப்பு வளையத்தில் வைகை: மதுரை வைகை ஆற்றின் ஆழ்வார்புரம் அருகே இந்து சமய அறநிலைத்துறை மற்றும் லாலா சத்திரம் சார்பில் மண்டகப்படி அமைக்கப்பட்டு, 4 புறமும் பக்தர்கள் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள், உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் பக்தர்கள் வந்து செல்லும் வழித்தடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi