திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: நெல்லுக்கான விலை உயர்வை ஒன்றிய அரசு அறிவித்திருப்பது போதுமானதல்ல. உற்பத்தி செலவை கணக்கிட்டு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சி தலைவரை போன்று செயல்படுகிறார். இது நியாயம் இல்லை. முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு சென்றதை விமர்சிக்கும் ஆளுநர், பிரதமர் தொழில் அதிபர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதை என்னவென்று சொல்வது.
ஆளுநர் தனது பொறுப்பை கைவிட்டு விட்டு பாஜக மாநில தலைவர் போல செயல்படுகிறார்.
அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு என்ன வேண்டுமானாலும் பேசட்டும். தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்தி வருகிறார். அவர் கட்டுப்பாடுடன் பேசாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும். ரயில்வே துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு கணிசமான தொகையை இழப்பீடாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஒடிசா ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.