திருவனந்தபுரம்: கேரள சட்டசபை நிறைவேற்றிய 8 மசோதாக்களில் அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று ஒன்றில் மட்டும் கையெழுத்து போட்டார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வருவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு, பஞ்சாப் உள்பட மாநிலங்களின் கவர்னர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே கேரள சட்டசபையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் கவர்னர் ஆரிப் முகம்மது கையெழுத்து போடாமல் இருந்தார். இதை எதிர்த்து கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன. இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறை தொடர்பான ஒரே ஒரு மசோதாவில் மட்டும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் கையெழுத்து போட்டார். பல்கலைக்கழகங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைப்பது, துணைவேந்தர்களை நியமிப்பது, லோக் ஆயுக்தாவின் அதிகாரத்தை குறைப்பது உள்பட 7 மசோதாக்களை அவர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.