Tuesday, May 21, 2024
Home » 20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்: ரூ.81 கோடியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி; பள்ளிக் கல்வித்துறை முடிவு

20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்: ரூ.81 கோடியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி; பள்ளிக் கல்வித்துறை முடிவு

by Karthik Yash

சென்னை: தமிழ்நாட்டில் 20,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கவும், ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கையடக்க கணினிகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 33 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவீன முறையில் கல்வி கற்பிக்க ‘ஸ்மார்ட் வகுப்பறைகளை’ அமைக்கவும், அத்துடன் இன்டர்நெட் வசதிகளை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் இயங்கி வருகின்றது. அது நடுநிலைப் பள்ளிகளில் இல்லை.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6552 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகளை பொறுத்தவரை மாணவர்கள் கரும்பலகை இல்லாமல் அகன்ற திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். இந்த பணிகள் அடுத்த கல்வி ஆண்டுக்குள் தொடங்கப்பட உள்ளன. இது தவிர, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் நவீன டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 853 இடைநிலை ஆசிரியர்கள், 18 ஆயிரத்து 496 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 53 ஆயிரத்து 349 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கையடக்க கணினி வழங்கப்படும். இந்த கல்வியாண்டு வழங்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இணைய தள வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம் ரூ.1500 கட்டணத்தில் பள்ளிகளில் இணைய தள வசதிகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அடுத்தகட்டமாக கையடக்க கணினிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.81 கோடியே 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

one + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi