புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை சார்பில் சிலிண்டர் மானியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அந்த தொகுதி பாஜ எம்எல்ஏ விவிலியன் ரிச்சர்ட் ஜான்குமார் பங்கேற்று பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தொகுதி மக்கள் 20க்கும் மேற்பட்டோர் மேடை மீது ஏறி, தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படாதது தொடர்பாக எம்எல்ஏவிடம் நேருக்கு நேராக சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த எம்எல்ஏ, இவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்க மறுத்த போராட்டக்குழுவினர் தொடர்ச்சியாக இதே பதிலைத்தான் கூறி வருவதாகவும், இதுவரை எந்தவொரு அடிப்படை வசதியும் செய்யப்படாதது குறித்தும் கேள்வி கேட்டதோடு, மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாத எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.