Wednesday, June 12, 2024
Home » மக்களை தேடி வரும் அரசு

மக்களை தேடி வரும் அரசு

by Dhanush Kumar

த மிழ்நாடு முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 7, 2021ல் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததுமே கையெழுத்தான அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் பலத்த வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிப்பதாகவும், இதுவரை 250 கோடிபேர் இலவச பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை நகர பேருந்தில் கணவருடன் பயணித்த வெளிநாட்டு பெண்ணுக்கு கட்டணம் பெறப்படவில்லை. தமிழக அரசின் இந்த திட்டத்தை பாராட்டி, பெண்ணின் கணவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா காலக்கட்டங்களில் மருத்துவமனைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் வயதானோர், நோய்வாய்பட்டோர் மிகவும் அவதியடைந்தனர். இதனையறிந்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாக, கடந்த 2021, ஆக.5ம் தேதி ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கினார் முதல்வர். இதுவரை, சுமார் 1 கோடி பேருக்கும் மேலானவர்களுக்கு இத்திட்டத்தில் மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மருத்துவமனைகளுக்கு சிரமப்பட்டு சென்று வந்தவர்கள், இல்லங்களை தேடி மருந்து, மாத்திரைகள் வருவதால் மனம் மகிழ்ந்துள்ளனர்.

மதிய உணவு உண்டு வந்த பள்ளி குழந்தைகள், காலையில் பசியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காக, காலை உணவு திட்டமானது தமிழகம் முழுவதும் விரிவடைந்துள்ளது. ஒரு கோடிக்கும் மேலான பெண்களுக்கு மாதந்தோறும், தவறாமல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தங்களுக்கான சில செலவுகளை, யாரையும் எதிர்பாராமல் பெண்கள் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும் மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நலத்திட்டங்களில் அடுத்தக்கட்டமாக, நேற்று முதல் சென்னை நீங்கலாக ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் முகாம் திங்கள்தோறும் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்களின் குறைகள் தொடர்ந்து தீர்க்கப்பட்டும் வருகிறது. இந்த சூழலில் மக்களை தேடி அதிகாரிகள் சென்று, அவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தால் என்ன என்ற யோசனையே ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டமாக வடிவம் பெற்றுள்ளது. மக்களின் தேவையே முதன்மையான பணி என்ற அடிப்படையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதன்படி மாதந்தோறும் 4வது புதன்கிழமை, கலெக்டர் தலைமையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடத்தப்படும். தேதி, வட்டம் குறித்த தகவல் முன்னரே அறிவிக்கப்படும். குறிப்பிட்ட அந்த வட்டத்தில் கலெக்டர் மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்கியிருந்து, அரசு துறைகள் செயல்படுத்தும் திட்டங்கள், மக்களுக்கான சேவைகள் தெரிவிக்கப்படும். இதுதொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்படும். இதர திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். மேலும், மக்களிடம் புகார் மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவும் உள்ளது. மக்களின் புகார்களை அதிகாரிகள் பரிசீலித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi