சென்னை: சென்னை விமான நிலையம், விமான நிலைய சரக்ககம் மற்றும் சென்னை துறைமுகம் சுங்கத்துறை அலுவலகங்களுக்கு 39 புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாட்டில் சென்னை சர்வதேச விமானநிலையம், விமானநிலைய சரக்ககம், சென்னை துறைமுகம் ஆகிய சுங்கத்துறை அலுவலகங்களுக்கு 39 ஆய்வாளர்களை புதிதாக நியமனம் செய்துள்ளது. இவர்கள் பயிற்சி காலம் முடிந்ததும், தமிழ்நாட்டில் உள்ள தென் மண்டல சுங்கத்துறை அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை பொறுப்பேற்றனர். இவர்கள் சென்னை விமான நிலையம், விமானநிலைய சரக்ககம், சென்னை துறைமுகம், திருச்சி, கோவை, சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த 39 பேரில் பெரும்பான்மையோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் பணிக்கு வந்துள்ளதால், தமிழ்நாட்டில் விமான நிலையங்கள், துறைமுகங்களில் பணியில் உள்ள அதிகாரிகள் வடமாநிலங்களுக்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 39 பேர்களில் ஓரிருவரை தவிர மற்றவர்களுக்கு இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மாநில மொழிகள் தெரியாது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக பிரிவியண்ட் ஆபீசர் ரேங்கில் மேலும் 50 பேர் நியமிக்கப்பட இருப்பதாகவும், அந்தப் பட்டியல் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையம், துறைமுகங்களுக்கு சுங்க அதிகாரிகள் 39 பேர் நியமனம்: பெரும்பான்மை வடமாநிலத்தவர்கள்
previous post