சென்னை: அரசு தொடர்புடைய அலுவலகங்களில் தினம் ஒரு குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற அரசாணையை கறாராக பின்பற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: அரசு மற்றும் அரசு தொடர்புடைய அலுவலகங்களில் தினம் ஒரு குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற அரசாணையை கறாராக பின்பற்ற வேண்டும் என தலைமை செயலாளர் அறிவுறுத்தியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமத்துவம் முழங்கிய தொன்மை பெருமை கொண்ட திருக்குறளின் கருத்துக்களை தொடர்ந்து பரப்புவது அவசியமாகும். சாதி, மதக் கருத்துக்களால் மனிதர்களை பிளவுபடுத்தி, வெறுப்பு விதைகளை விதைத்து வரும் சூழலில் அரசு அலுவலகங்கள் முன் மாதிரியாக திகழ்ந்திட வேண்டும் என்ற அரசின் கொள்கை முனைப்பு பாராட்டத் தக்கது. கிராம நிர்வாக அலுவலகம் தொடங்கி, தலைமைச் செயலகம் வரை அனைத்து அலுவலகங்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்ற தலைமைச் செயலாளர் அறிவுரையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.