பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ரோஜா ராஜசேகரன் சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நாடிமுத்து நகரில் நடந்தது. இதில் ராஜசேகரனின் படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கம் நடத்த வேண்டும் என்பதற்காக மோடியால் அனுப்பப்பட்ட தூதர் கவர்னர் ஆர்.என்.ரவி. அவரது வேலையை விட்டுவிட்டு மற்ற வேலையை பார்த்து வருகிறார்.
இதனால் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார், மோடியால் பாராட்டப்படுகிறார். மோடி, பிரதமர் ஆனதற்கு பிறகு நாட்டில் ஜனநாயகம் மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், பாசிசம் தலை தூக்கி கொண்டிருப்பதால்தான் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.
மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்க மோடிக்கு நேரமில்லை. அவர் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்வதால் இந்திய நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரமில்லை. இந்தியா கூட்டணியை சேர்ந்த 26 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மணிப்பூருக்கு சென்று 2 நாட்கள் பாதிக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து அங்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் குறித்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வந்தால் இது பற்றி பேசுவார்கள்.