செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வீட்டு சமையலறைக்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்புதுறை வீரர்கள் வனப்பகுதியில் விட்டனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்க மணிமாறன் (40). இவரது மனைவி வழக்கம்போல் நேற்று காலை வீட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு உஷ்… உஷ்… என்று சத்தம் கேட்டுள்ளது. எட்டிப் பார்த்தபோது அங்கு நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு மணிமாறனின் மனைவி அலறியடித்துக்கொண்டு சமையல் அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். உடனே மணிமாறன் செங்கல்பட்டு தீயணைப்புதுறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் செங்கல்பட்டு மாவட்ட உதவி தீயணைப்புதுறை அலுவலர் கிருஷ்ணமூரத்தி தலைமையில் தீயணைப்புதுறை வீரர்கள் மணிமாறன் வீட்டிற்குச் சென்று சமையல் அறையில் இருந்த 4 அடி நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டுச் சென்றனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பாம்பு உள்ளிட்ட பல விலங்குகள் தண்ணீரைத் தேடி குடியிருப்புகளுக்குள் வருவது அதிகமாக இருக்கும். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தீயணைப்புதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.