சென்னை: ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது. தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் 28ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ₹50 ஆயிரத்துக்கு விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதாவது, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ₹6,390க்கும், சவரனுக்கு ₹1,120 உயர்ந்து ஒரு சவரன் ₹51,120க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை அதிகப்பட்ச விலை என்ற உச்சத்தை தொட்டது.
அதே நேரத்தில் தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சவரனுக்கு ₹4,400 வரை உயர்ந்தது. இந்த ஜெட் வேக விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்காக நகை வாங்க காத்திருப்போருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் இப்படியே தங்கம் விலை உயர்ந்து சவரன் ₹55 ஆயிரத்தை தொட்டு விடுமோ? என்ற ஏக்கமும் நகை வாங்குவோர் இடையே நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை பெயரளவுக்கு கிராமுக்கு ₹20 குறைந்து ஒரு கிராம் ₹6,370க்கும், சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ரூ.50,960க்கும் விற்பனையானது.