திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்தபாபு தலைமையில் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல்லிற்கு வந்த தனியார் வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் ரூ.4.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன.
விசாரணையில், வாகனத்தில் வந்தவர்கள் மும்பையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படும் தங்க நகைகளை பல்வேறு மாவட்டங்களிலுள்ள நகை கடைகளுக்கு எடுத்து செல்லும் ஒப்பந்தத்தை பெற்ற தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என்பது தெரியவந்தது. ஆனால், ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த விவரங்களுக்கும், வாகனத்தில் இருந்த தங்க நகைகளின் மதிப்பீட்டிற்கும் வேறுபாடு இருந்தது. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தங்கநகைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.