லக்னோ: உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி பழமையான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி கோயிலை இடித்து கட்டப்பட்டுள்ளதால், அந்த இடத்தை இந்துக்களிடம் மீண்டும் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வாரணாசிமாவட்ட நீதிமன்றம் ஜூலை 21ம் தேதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஜூலை 24ம் தேதி தொல்லியல் துறை ஆய்வை தொடங்கியது.
இதனிடையே மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஞானவாபி மசூதி குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் தொல்லியல் துறை ஆய்வை தொடர அனுமதி வழங்கியதுடன், மசூதி குழு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, இன்று முதல் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த உள்ளனர்.