சென்னை: பொது மருத்துவ கலந்தாய்வை ஒன்றிய அரசே நடத்தும் என அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் நம் இந்திய நாட்டில் உள்ள 100% மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்த முடிவெடுத்துள்ளதாக அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியின் 187 வது பட்டமளிப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது;
அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை பறிபோகும். பொது மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும். பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். பொது மருத்துவ கலந்தாய்வு நடத்த ஒன்றிய அரசு தீவிர காட்டும் என்றால் சட்டப்பூர்வாமான நடவடிக்கை எடுப்போம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட பொது கலந்தாய்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜூன் 15-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை திட்டமிட்டபடி திறக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.