Sunday, May 12, 2024
Home » பாசம் வைத்தால் பாலினம் பொருட்டல்ல… இன்ஸ்டா காதலியுடன் திருநம்பி டும்..டும்..டும்…

பாசம் வைத்தால் பாலினம் பொருட்டல்ல… இன்ஸ்டா காதலியுடன் திருநம்பி டும்..டும்..டும்…

by Ranjith

மேல்மலையனூர்: இன்ஸ்டா காதலியுடன் திருநம்பி திருமணம் செய்து கொண்ட சம்பவம் செஞ்சி அருகே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி (23). இவர் தன் பாலின தூண்டுதலினால் ஆணாக மாறி பெயரை அஸ்விந்த் என மாற்றிக்கொண்டார். தற்போது இவர் காஞ்சிபுரத்தில் தங்கி நாடக கலைஞர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இவருக்கும் செஞ்சி அடுத்த மேல்சித்தாமூர் பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

கவுசல்யா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நண்பர்களாக பழகி வந்த இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் தீவிரமாக மாறி ஒருவரை ஒருவர் பிரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் இருவரும் இணைந்து வாழ தீர்மானித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் கடந்த 22ம் தேதி சென்னை வடபழனி முருகன் கோயிலில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் இதுகுறித்து இருவரும் பெற்றோர்களிடம் கூறினர். இது பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து தனது மகளை மீட்டுத்தருமாறு கவுசல்யாவின் பெற்றோர் செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இருவரின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அஸ்விந்த் கூறுகையில், ‘நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது என் நிலை உணர்ந்து ஆணாக மாறினேன். கடந்த ஆறு மாதமாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கவுசல்யாவை தீவிரமாக காதலித்தேன். விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டோம். உயிர் உள்ளவரை அவளை சந்தோஷமாக கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன்’ என்றார்.

இதுகுறித்து கவுசல்யா கூறுகையில், ‘நாங்கள் இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் ஒரே பாலினமாக இருந்தாலும் எங்களுக்குள் அன்பை மட்டுமே எதிர்நோக்கி திருமணத்தை செய்துகொண்டோம். எங்களை பிரிக்க யார் முற்பட்டாலும் அது முடியாது’ என்றார். இருவரது வாக்குமூலத்தையும் எழுதி பெற்றுக்கொண்ட போலீசார் இருவரையும் சேர்ந்து அனுப்பி வைத்தனர். இருவரது பெற்றோர்களும் தங்களுடன் வருமாறு அழைத்தும் பெற்றோர்களை மறந்து தங்கள் காதல் உண்மையானது என கூறி இருவரும் சேர்ந்து வாழ ஒன்றாக இணைந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi