திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அருங்காட்சியகத்தை கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி நேற்று கீழடி அருங்காட்சியகத்தை காண மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வந்தனர்.
பின்னர் அருங்காட்சியகம் திறந்து ஓராண்டு நிறைவானது அறிந்த மாணவிகள், கல் மண்டபம் அருகே பரத நாட்டியமாடி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். தமிழர்களின் பாரம்பரிய நடனம், இசை உள்ளிட்டவைகளும் அருங்காட்சியக பொருட்கள் மூலம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இதுபோன்று தமிழர்களின் நாகரீகத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதிநவீனமாக அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு இதுவரை மூன்றரை லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். உள்நாடு மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுப்லா பயணிகள் வந்து செல்கின்றனர்.