சென்னை: அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாற்று புத்தக வெளியீட்டு விழா சென்னை, கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.
அவர் பேசியதாவது:
அய்யா வைகுண்டர் நாரயணின் அவதாரம், வைகுண்டர் தோன்றிய சமூக கலாச்சாரம், காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலக்கட்டம். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டரே தோன்றினார். ஐரோப்பிவிற்கு செல்லும் முன்பே கிறித்துவம் இந்தியாவிற்கு வந்தது. வெளியில் இருந்து வந்த சிலர் அனைவரும் சமம் எனும் சனாதன தர்மத்தின் கோட்பாட்டை அழித்தார்கள். கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட இலக்கு மதமாற்றம் செய்வதே, பாரதம் வேற்றுமையில், ஒற்றுமை கொண்ட நாடாக திகழ்ந்தது.
இந்தியாவை ஆள்வதற்கு கிறித்துவ மதமாற்றம் என்பதை கொள்கையாக பிரிட்டிஷ் அரசு கொண்டது. மேலும் பள்ளி படிப்பை கூட முழுவதும் முடிக்காத கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் இந்தியாவிற்கு வந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் மக்களை கிறித்துவ மதமாற்றத்திற்கு உட்படுத்தினர். இப்படி எல்லாம் சொல்வதால் எனக்கு கிறித்துவ மதத்தின் மீது இயேசுவின் மீது எவ்வித வெறுப்பும் கிடையாது, இயேசுவை எனக்கு பிடிக்கும். கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது, இன்று பாரதம் விழிப்படைந்து பொருளாதார கலாச்சாரம் வழிகளில் முன்னேறி வருகிறது. இவ்வாறு ஆர்.என்.ரவி கூறினார்.