Friday, May 17, 2024
Home » காசா மீதான தாக்குதல் எதிரொலி; ரஷ்யாவில் இஸ்ரேல் விமானம் முற்றுகை: பாலஸ்தீன ஆதரவாளர்களால் பதற்றம்

காசா மீதான தாக்குதல் எதிரொலி; ரஷ்யாவில் இஸ்ரேல் விமானம் முற்றுகை: பாலஸ்தீன ஆதரவாளர்களால் பதற்றம்

by Suresh

மகச்சலா: காசா மீதான தாக்குதல் எதிரொலியாக ரஷ்யாவில் இஸ்ரேல் விமானம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து, ரெட் விங்ஸ் என்ற விமானம் நேற்றிரவு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள மகச்சலா விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம் ரஷ்யா தலைநர் மாஸ்கோவிற்கு செல்லும் முன் மகச்சலாவில் சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டது. இஸ்ரேலில் இருந்து விமானம் வந்ததால், பாலஸ்தீன ஆதரவாளர்கள் கும்பலாக விமான நிலையத்திற்குள் புகுந்தனர்.

அவர்கள் குறிப்பிட்ட மதத்தின் பெயரை கூறி கோஷங்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து, இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பினர். அவர்கள் அந்த விமானத்தை நோக்கி ஓடினர். அவர்களை அங்கிருந்த பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பதற்றம் நிலவியது. கூட்டத்தில் இருந்த சிலர், விமானத்தின் மேல் ஏறி கூச்சலிட்டனர். ஒருவழியாக விமான நிலையத்தை சுற்றிவளைத்த காவல்துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களை பல மணி நேரம் போராடி வெளியேற்றினர். அதன்பின் விமான நிலையத்தை மூடிவிட்டு, இஸ்ரேல் விமானத்தை திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரஷ்யாவின் ஏவியேஷன் ஏஜென்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘மகச்சலா விமான நிலையத்தின் போக்குவரத்து மண்டலத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நுழைந்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்குள் வரும் விமானங்கள் மற்றும் வெளிச்செல்லும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அவை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது. மேற்கண்ட சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

அந்த வீடியோவில், விமான நிலையத்திற்குள் நுழைந்த சிலர் விமானத்தை நோக்கிச் செல்வதற்கு முன் தங்கள் பாஸ்போர்ட்டை சரிபார்க்குமாறு விமான நிலையத்தில் உள்ளவர்களிடம் கேட்டனர். அவர்களில் ஒருவர், ‘குழந்தைகளைக் கொல்பவர்களுக்கு மகச்சலாவில் இடமில்லை’ என்று எழுதப்பட்ட சுவரொட்டியை வைத்திருந்தார். மற்றவர்கள் தங்களது மதத்தின் பெயரை எழுப்பி கோஷமிட்டனர். போலீசார் நடத்திய தடியடியில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்கள் குறித்து ரஷ்ய அரசின் தரப்பில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

You may also like

Leave a Comment

2 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi