சென்னை : வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
ஒன்றியத்தில் கடந்த 2014ம் ஆண்டு பாஜ ஆட்சிக்கு வந்த பின், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும்போது (2014) சிலிண்டர் விலை ரூ.414 என்று இருந்தது. தற்போது சுமார் மூன்று மடங்கு அதாவது ரூ.700 அதிகரித்து ரூ.1100க்கு மேல் விற்கப்படுகிறது. சென்னையின் சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக உள்ளது. இது வரலாறு காணாத விலையேற்றமாகும்.
சிலிண்டர் புக்கிங் செய்யும் பொதுமக்கள், அதனை எடுத்து வரும் ஏஜென்சிகளின் டெலிவரிமேன்களுக்கு வழங்கும் தொகையோடு சேர்க்கும்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.1,150 முதல் ரூ.1,200 வரை வழங்க வேண்டி வருகிறது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு பொருந்தும்.வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.இதன்மூலம் சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறைந்து ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.