Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரிவலம்வந்தநல்லூர் இரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும்:தென்னக இரயில்வே துறைக்கு வைகோ கோரிக்கை

மதுரை: கரிவலம்வந்தநல்லூர் இரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்னக இரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார். இரயில்வே திட்டங்கள் குறித்து இன்று மதுரையில், தென்னக இரயில்வே பொதுமேலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. வைகோ எம்.பி. அனுப்பியுள்ள கோரிக்கையில்,

1. கரிவலம்வந்தநல்லூர் இரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.

2. இரயில் எண். 16721/16722 மதுரை-கோவை எக்ஸ்பிரஸ், வணிகர்கள் மற்றும் பிற பயணிகளின் நலன் கருதி திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். தற்போது மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை ரயில் இல்லை.

3. மதுரை - கோவை பிரிவு அகல இரயில் பாதையாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்காக இரயில்வே செலவழித்த தொகை சுமார் 750 கோடி. இப்பாதையில் தற்போது ஒரே ஒரு தினசரி இரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. மதுரை மற்றும் கோயம்புத்தூர் இடையே மீட்டர் கேஜ் பாதையில் 5 ஜோடி இரயில்கள் இயக்கப்பட்டன. எனவே, இராமேஸ்வரம்- செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் இரயில்கள் இயக்க வேண்டும்.

4. மதுரை-பெங்களூரு இடையே காலையில் செல்லும் வகையில் எக்ஸ்பிரஸ் இரயிலை இயக்க இரயில்வே நிர்வாகம் 2013ல் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அது நிறைவேற்றப்படவில்லை. எனவே மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் இரயிலை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும்.

5. கொங்கன் இரயில்வே தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் தமிழக மக்களுக்கு கொங்கன் இரயில்வேயின் பலன் கிடைக்கவில்லை. தற்போது, மக்களின் அதிக ஆதரவுடன் கொங்கன் இரயில்வே வழியாக திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் இரயில் (22630/22629) இயக்கப்படுகிறது. இந்த இரயிலை, திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் இரயிலாக மாற்ற வேண்டும். இந்த வழித்தடத்தில் மும்பையை விரைவில் சென்றடையலாம்.

6. சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து பெங்களூர்/மைசூர் நோக்கிச் செல்வதற்காக 16235 மைசூரு எக்ஸ்பிரஸ்ரைப் பிடிக்கச் செல்லும் பயணிகள் விருதுநகர் செல்ல வேண்டி இருக்கிறது. இதற்கான இணைப்பு இரயிலாக (வண்டி எண் 06503) உள்ளது. அதேசமயம், மைசூரில் இருந்து திரும்பும்போது, வண்டி எண். 16236 மதுரையை காலை 07:25 மணிக்கு வந்தடைகிறது. ஆனால் செங்கோட்டை நோக்கி செல்லும் இரயில் (வண்டி எண் 06504) மதுரையில் இருந்து காலை 07:10 மணிக்கு புறப்பட்டு விடுகிறது. இதனால் மதுரையில் இருந்து தங்கள் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பேருந்து அல்லது வேறு போக்குவரத்தையே நாட வேண்டி இருக்கிறது. எனவே 16236 எக்ஸ்பிரஸ் இரயில் ஆறரை மணி நேரத்தில் மதுரையை அடையும் வகையில் இரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

7. போக்குவரத்தை எளிதாக்க செங்கோட்டை - தென்காசி மற்றும் திருநெல்வேலி சந்திப்பு - திருநெல்வேலி டவுன் இடையே இரட்டைப் பாதைக்கு கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

8. திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை நிலையங்களில் அதிக இரயில்களைக் கையாள நடைமேடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

9. தென்காசியில் பைபாஸ் லைன் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் அந்த வழியாக விருதுநகர் - திருநெல்வேலி இரயில்களை இயக்கலாம்.

10. பாவூர்சத்திரத்தில் நடைமேடை எண் 1இல் உள்ள மினி ஷெல்டர்களை அதிகரிக்க வேண்டும்.

11. திருச்செந்தூர் - திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் பகுதிகளில் நடைமேடை நீளமாக அமைக்கும் வேலையை விரைவுபடுத்த வேண்டும்.

12. திருநெல்வேலி - தென்காசி - விருதுநகர் பிரிவில் பயணிகள் தாங்கள் பயணிக்க போகும் பெட்டி எங்கு நிற்கும் என்று அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள இரயில் நிலையங்களில் இரயில் பெட்டி எங்கு நிற்கும் என்று அடையாளக் காட்சிப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

வண்டி நின்று செல்ல கோரிக்கை:

13. 16791/16792 பாலருவி விரைவு வண்டிக்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் வழங்க வேண்டும்.

14. சாத்தூரில் கீழ்க்கண்ட இரயில்கள் ஏற்கனவே நின்று சென்றது போல் மீண்டும் நின்று செல்லவும் மற்றும் அறிமுகமான புதிய வண்டிகள் நின்று செல்லவும் கோரிக்கை:

அ) 12633 சென்னை- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

ஆ) 20605 சென்னை- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்.

இ) 22667/22668 கோயம்புத்தூர்- நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்.

ஈ)22629/22630 திருநெல்வேலி-தாதர் வாராந்திர அதி விரைவு.

உ) 22621/22622 ராமேஸ்வரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.

ஊ) 16367/16368 காசி தமிழ் சங்கம் எக்ஸ் பிரஸ்.

15. கோவில்பட்டியில் கீழ்க்கண்ட ரயில்கள் ஏற்கனவே நின்று சென்றது போல் மீண்டும் நின்று செல்லவும் மற்றும் அறிமுகமான புதிய வண்டிகள் நின்று செல்லவும் கோரிக்கை:

அ) 12633 சென்னை- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.

ஆ) 20605 சென்னை- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்.

இ) 12667/68 சென்னை- நாகர்கோயில் வாராந்திர எக்ஸ்பிரஸ்.

ஈ) 16367/16368 காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ்.

உ) 22621/22622 ராமேஸ்வரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.

ஊ) 20665/66 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.

16. திருநெல்வேலி - தென்காசி சந்திப்பு வழியாக தாம்பரம் வாராந்திர சிறப்பு இரயில் முன்பு இயக்கப்பட்டது போல் மீண்டும் இயக்க வேண்டும் .

17. தென்காசி வழியாக திருநெல்வேலி - பெங்களூரு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

18. 16847/16848 செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு இரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 21 ஆக உயர்த்தி, சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கார் பெட்டிகளை சேர்த்து தாம்பரம் வரை இரயிலை நீட்டிக்க வேண்டும்.

19. 20681 சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயில் அதிவிரைவு இரயிலாக மேம்படுத்தப்பட்டு உள்ளதால், இரண்டாம் வகுப்பு படுக்கைக்கான பெட்டிகளை கூடுதலாகச் சேர்த்து, 24 பெட்டிகளாக அதிகரிக்கவும்.

20. 06029/06030 திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு விரைவு வண்டியை நிரந்தர இரயில் எண்களுடன் வழக்கமான வாராந்திர விரைவு வண்டியாக மாற்ற வேண்டும்.

21. 20683/20684 செங்கோட்டை வாராந்திர அதிவிரைவு வண்டியை நாள்தோறும் இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.