திருத்தணி: திருத்தணி காவல் நிலையம் அருகே கஞ்சா போதையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு இதற்கு காரணமாக இருவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். திருத்தணி கன்னிகாபுரம் சாலையில் காவல் நிலையம் உள்ளது. இங்கு வசிப்பவர் நரசிம்மன் மகன் வினோத்குமார்(38). இவர் இந்திரா நகர் பகுதியில் ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு இந்திராநகர் சாலை சந்திப்பின் அருகே வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வினோத்குமாரை இளைஞர்கள் இருவர் வழிமறித்து அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து கடைக்குள் ஓடிய வினோத்குமாரை விடாமல் துரத்திச் சென்று இளைஞர்கள் தலையில் பலமாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீசார் படுகாயம் அடைந்த வினோத்குமாரை மீட்டனர். பின்னர், திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பகிரதன்(24) என்பவர் வினோத்குமாரை கத்தியால் வெட்டியது தெரியவந்துள்ளது. பகிரதனுடன் சென்னை சேர்ந்த இளைஞர் ஒருவனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், வெட்டிய கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்டுடியோ வாலிபரை கத்தியால் வெட்டிய இரண்டு நபர்களை பிடிப்பதற்கு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.