மேட்டூர்: மேட்டூரில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சேலம் மாவட்டம், மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்று சேர்ந்து, நேற்று மாலையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு, மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாய்க்கு சென்றனர். சிலையை கரைப்பதற்காக போட்டிக் கொண்டு தண்ணீருக்குள் இறங்கினர். சிறிது நேரத்தில் அனைவரும் கரைக்கு திரும்பிய நிலையில், 9ம் வகுப்பு மாணவர்களான சந்தோஷ்(14), நந்தகுமார்(14) ஆகியோரை காணவில்லை. மற்றவர்கள் மீண்டும் தண்ணீருக்குள் இறங்கி தேடிப்பார்த்தபோது, இருவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்து, சிறுவர்களின் பெற்றோர் அங்கு வந்து கதறி அழுதனர். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மாணவர்கள் பலியான இடத்தில் சிலை கரைக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில், வீட்டிற்கு அருகிலேயே நீர் நிலை இருந்ததால், அங்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.