ஹேக்: இனப்படுகொலை விதிகளை மீறியதாக ரஷ்யா மீது குற்றம்சாட்டிய உக்ரைன் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்ய வழக்கறிஞர்கள் வலியுறுத்தினார்கள். ரஷ்யா- உக்ரைன் இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி தொடங்கி போர் நடந்து வருகின்றது. ரஷ்யா உக்ரைனின் பகுதிகளை ஆக்கிரமித்ததும் சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா மீது உக்ரைன் வழக்கு தொடர்ந்து. கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளில் இனப்படுகொலை நடந்ததாக தவறான கூற்றுக்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
உக்ரைனில் இனப்படுகொலை செய்ய திட்டமிடுவதாகவும் ரஷ்யா மீது குற்றம்சாட்டியிருந்தது. இந்த வழக்கு ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் 16 நீதிபதிகள் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரஷ்யாவின் சட்டக்குழுவின் தலைவரான ஜெனடி குஸ்மின், “ரஷ்யாவின் போரை நிறுத்த முயலும் உக்ரைனின் வழக்கு நம்பிக்கை குறைபாடு உடையது மற்றும் நீதித்துறைக்கு முரணானது. எனவே உக்ரைன் வழக்கை நிராகரிக்க வேண்டும்”என்று வாதிட்டார். இந்நிலையில் ரஷ்யாவின் வாதத்திற்கு எதிராக உக்ரைன் வழக்கறிஞர்கள் குழு இன்று வாதிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.