பெரம்பூர்: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, சிம்ஸ் மருத்துவமனை சார்பில் கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நேற்று காலை இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதில், சிம்ஸ் மருத்துவமனையின் துணை தலைவர் ராஜு சிவசாமி, நரம்பியல் துறை இயக்குநர் மற்றும் மூத்த ஆலோசகர் மீனாட்சி சுந்தரம், மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில், பக்கவாத நோயால் ஏற்படும் அபாயம் குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ரத்த அழுத்த சோதனைகள், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, நாடி துடிப்பு அளவு, பிஎம்ஐ மதிப்பீடு, உளவியல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையை அணுகி சலுகைகளுடன் தொடர்ந்து சிகிச்சை பெறலாம் என மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முகாமில் திருவிக நகர் மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், தாவூத் பீ, சாரதா, அமுதா, யோக பிரியா, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.