Friday, June 14, 2024
Home » 7 மாவட்டங்களில் தரிசு நிலங்களில் 100% நடவு செய்து சாதனை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்

7 மாவட்டங்களில் தரிசு நிலங்களில் 100% நடவு செய்து சாதனை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்

by Dhanush Kumar

* 80 சதவீதம் நிதி இலக்கை கிராமங்களில் பயன்படுத்த திட்டம்

சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 7 மாவட்டங்களில் தரிசு நிலங்களில் 100 சதவீதம் நடவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான நிதியில், 80 சதவீதத்தை கிராமங்களில் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கிராம வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்ற அடிப்படையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள ஐந்தில் ஒரு பங்கு கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள தரிசு தொகுப்பு நிலங்களில் மின் அல்லது சூரிய சக்தி வசதியுடன் நீர்பாசன வசதிகளை ஏற்படுத்தி, நுண்ணீர் பாசனத்துடன் பழ மரக்கன்றுகளை நிரந்தர பயிர்களாகவும், ஊடு பயிர்களாக வேளாண் பயிர்களையும் சாகுபடி செய்வது முக்கிய அம்சமாகும். மேலும் கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் இதர திட்டங்களை 80 சதவீத அளவிற்கு ஒருங்கிணைத்தும் இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதனிடையே, இத்திட்டம் நடப்பு 2023-24ம் ஆண்டில் 2,504 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநில அரசின் முதன்மை திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மையில் 12,524 கிராம பஞ்சாயத்துகள் 5 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்று ஒட்டுமொத்த வளர்ச்சியை பெறச்செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டமானது 2021-22ம் ஆண்டில் 1997 கிராம பஞ்சாயத்துகளிலும், 2022-23ம் ஆண்டில் 3204 கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, 2023-24ம் ஆண்டில் இத்திட்டம் 2504 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குறைந்தபட்சம் 10 ஏக்கர் அளவுள்ள தரிசு நிலங்களை கண்டறிதல், நீர் ஆதாரங்களான ஆழ்துளை அல்லது திறந்தவெளிக் கிணறுகளை உருவாக்குதல், மின்சாரம் அல்லது சூரிய சக்தியின் மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் நிறுவுதல், நுண்ணீர்ப் பாசன அமைப்புகளை நிறுவுதல் மற்றும் பல்லாண்டு பழ, மரக்கன்றுகளை நடவுசெய்தல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய இனங்களாகும்.

இதுதவிர இதர திட்டங்களின் 80 சதவீதம் நிதி இலக்கினை இக்கிராமங்களில் செயல்படுத்த கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் இனங்களான தடுப்பணைகள், கற்பாறை அணைகள், பண்ணைக் குட்டைகள், உலர்களங்கள், மரக்கன்றுகள் நடுதல் போன்ற இனங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்திட சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இத்திட்டம் 7 மாவட்டங்களில் தரிசு நிலத்தொகுப்பில் 100 சதவீதம் முழுமையாக நடவு செய்து சாதனை படைத்துள்ளது. 6 மாவட்டங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நடவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நுண்ணீர் பாசனம் உள்ள தொகுப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் அதனை தவிர்த்து 31 மாவட்டங்களில் இத்திட்டமானது 64 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, இத்திட்டம் செயல்படுத்த தரிசு நில தொகுப்பின் நீர் பாசனத்திற்காக, அரசின் புறம்போக்கு நிலத்தில் ஆழ்துளை குழாய் கிணறு ஏற்படுத்த தாசில்தார் மூலம் தடையின்மை சான்று வழங்கவும், தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்ட பின் உடனடியாக மின் இணைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் 100 சதவீதம் தரிசு நிலத்தொகுப்பில் நடவு செய்யப்பட்டு சாதனை.

* வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கரூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான தரிசு நிலத்தொகுப்புகளில் நடவு செய்யப்பட்டுள்ளது.

* கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நுண்ணீர் பாசனம் உள்ள தொகுப்புகளை உருவாக்குவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

You may also like

Leave a Comment

13 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi