செங்கல்பட்டு: ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்ஜி. சிஜிஎல். போட்டித்தேர்வுக்கு “நான் முதல்வன்“ திட்டத்தின் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. இதில், விண்ணப்பதார்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ராகுல் நாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தற்போது, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால், வெளியிடப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஜி. சிஜிஎல் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மே மாதம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டித்தேர்விற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு. வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 வரை. வயது வரம்பில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயதுவரம்பில் தளர்வு உண்டு. மொத்த பணிக்காலியிடங்கள் தோரயமாக 7,500. இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 3.5.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட உள்ள இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்பத்தினை செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் அலுவலக தொலைபேசி எண் 044-27426020 மற்றும் கைப்பேசி 94990 55895ல் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.