சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன் என்று தமிழ்நாட்டை சேர்ந்த பாய்மரப்படகு போட்டி வீராங்கனை நேத்ரா குமணன் நம்பிக்கை தெரிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கான கடைசி தகுதி சுற்று போட்டி சமீபத்தில் பிரான்சில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான ஐ.எல்.சி.ஏ 6 பிரிவில் நேத்ரா குமணன் வெற்றி பெற்று 2 முறையாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் பிரான்சிலிருந்து அவர் நாடு திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உர்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய அவர் சர்வதேச பாய்மரப்படகு போட்டி வரைபடத்தில் இந்தியா இடம் பெற்றது மகிழ்ச்சி என்றார். 2வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாட இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த நேத்ரா பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் என்றும் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக நேத்ராவிற்கு தமிழ்நாடு அரசு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் இது அவரது வெற்றிக்கு பெருமளவு கைகொடுப்பதாகவும் அவரது தந்தை குமணன் தெரிவித்தார்.