ராமநாதபுரம்: சென்னையை சேர்ந்த நீதிமணி, இவரது மனைவி மேனகா மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி ஆசை காட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து ₹300 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் நீதிமணி, ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த மோசடியில் முகவர்களாக செயல்பட்டு பணம் மோசடியில் ஈடுபட்டதாக மண்டபம் அருகேயுள்ள கும்பரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார்(45), ராமநாதபுரம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் முருகவேல் (42) ஆகியோர் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
தற்போது இவர்கள், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் ஆரோக்கிய ராஜ்குமார், முருகவேல் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவிட்டார்.