சென்னை: தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், சி.வி.சண்முகம் மீது இரு பிரிவினர் இடையே வெறுப்பை உண்டாக்குதல், பொதுமக்களிடையே தவறான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீசார் 4 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடைகோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.வி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கறிஞர் ரியாஸ் அகமது, இ.பாலமுருகன் ஆஜராகினர். அப்போது நீதிபதி, ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது. அதற்காக ஏன் இப்படி மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். எம்பியாக உள்ள ஒருவர், முன்னாள் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கைத்தட்டல்களுக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. அவர் பேசியதை உங்களால் கூட படிக்க முடியாது. அந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்று கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.