புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். கடந்த ஆண்டு மே 30ம் தேதி, பணமோசடி தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் அமலாக்க துறை சத்யேந்தரை கைது செய்தது. அவர் இந்த வழக்கில் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், திகார் சிறை குளியலறையில் நேற்று காலை 6 மணியளவில் அவர் வழுக்கி விழுந்துவிட்டார்.
இதுகுறித்து திகார் சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ சத்யேந்தர் ஜெயின், குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதையடுத்து தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக முதலில் கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர், அவரை லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றனர்.