சென்னை: மிக்ஜாம் புயலுக்கு நிவாரணமாக ரூ.1000 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்தது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை, தலைமைச்செயலக வளாகத்தில் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: மக்களை இந்த பேரிடரில் இருந்து மீட்க முதல்வருக்கு அனைவரும் உற்றதுணையாக ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். கடந்த காலங்களை விட அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்த முறை சிறப்பாக இருந்தது. முதல்வர், அமைச்சர்கள் என அனைவருமே உடனடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு ஆறுதல் கூறி, தேங்கிய நீரை அகற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
47 ஆண்டுகளுக்கு பிறகு மிக கடுமையான கனமழை பெய்த காரணத்தால் வெகுஜன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேபோல், அரசும் தன்னுடைய சக்திக்கு ஏற்ப மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. நிவாரண பணிகளுக்காக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிற்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். ஆனால் எப்போதும் போல தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ரூ.1000 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மஹுவா மொய்த்ரா கடந்த காலங்களில் மக்களவையில் ‘‘மோடி அரசு அல்ல;அதானி சர்க்கார்’’ என தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையிலான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியதால் கோபமடைந்து, எதிர்க்கட்சிகளே பங்கேற்காத விசாரணை குழுவில் ஒரு சார்பாக செயல்பட்டு அவரது பதவியை பாஜ பறித்துள்ளார்கள். இது மோசமான முன்னுதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.