நீடாமங்கலம்: திருவாரூரில் திடீரென வெள்ளம் வந்தால் நீங்கள் என்ன பண்ணுவீங்க மேடம் என 11ம் வகுப்பு மாணவன் கேட்ட கேள்விக்கு கலெக்டர் கூலாக பதில் அளித்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பனில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் கலெக்டர் சாருஸ்ரீ கலந்துரையாடல் நடத்தினார். இறுதியில் மாணவ, மாணவிகள் சந்தேகங்களை கேட்கலாம் என்று கலெக்டர் கூறினார். அப்போது, 11வது படித்து வரும் மாணவன் வீரபாண்டியன் எழுந்து, ‘திருவாரூரில் திடீரென வெள்ளம் வந்தால் நீங்க என்ன பண்ணுவீங்க மேடம்’ என்று கேட்க அரங்கமே கலகலப்பானது.
இதற்கு பதில் அளித்த கலெக்டர், இயற்கை பேரிடர் என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கக்கூடியது. இது தடை செய்யும் விஷயம் அல்ல. மழை அதிகமாக வந்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார். தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவன் ஸ்ரீ ஹரிபிரசாத், பத்தாம் வகுப்பில் நீங்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்தீங்க மேடம் என கலெக்டரிடம் கேட்க, அதற்கு கலெக்டர் சிரித்துக்கொண்டே, ‘அவ்வளவு மோசமான மதிப்பெண் எல்லாம் நான் எடுத்து விடவில்லை. நான் படிக்கும்போது நிறைய போர்டுகள் இருந்தது. நான் ஆங்கிலோ இந்தியன் போர்டில் படித்தேன். ஆயிரத்துக்கு 939 மதிப்பெண்களும், அனைத்து பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மேலும், சமூக அறிவியலில் மட்டும் 84 மார்க் எடுத்தேன்’ என கூறினார்.
தொடர்ந்து கலெக்டர், கேள்வி கேட்ட மாணவனிடம் நீங்கள் எவ்வளவு மார்க் எடுப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு மாணவர், 360 மதிப்பெண்கள் என்றார். அதற்கு கலெக்டர், ‘எப்போதும் குறிக்கோள் பெரிதாக இருக்க வேண்டும்’ என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.