சென்னை: நவீன தீயணைப்பு கருவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொடைக்கானல்,வேலூர் மலைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் பசுமை குறைந்து, செடி கொடிகள், புற்கள், மரங்கள் காய்ந்து வருகின்றன. கடந்த சில நாட்ளாக அவ்வப் போது காய்ந்த சருகுகளில் தீப் பற்றி, அடுத்தடுத்த பகுதிகளுக்கும் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில் ஏராளமான அரிய வகை மரங்களும், தாவரங்களும் கருகி வருகின்றன.
வனத்துறை சார்பில் காட்டுத் தீ ஏற்படும் சூழல் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் காட்டு தீ பரவுவதை தடுப்பதை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜிபிஎஸ் முறையால் காட்டுத் தீ சம்பவங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கொடைக்கானல், வேலூரில் அதிக அளவில் காட்டு தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளது. தடுப்பு நடவடிக்கை காரணமாக 97% காட்டுத் தீ சம்பவங்கள் 48 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.