திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி பிரம்மபுரம் என்ற இடத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏற்பட்ட நச்சுப் புகையால் கொச்சி நகர மக்கள் பல நாட்கள் கடும் அவதியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி (பொறுப்பு) எஸ்.வி.பட்டி மற்றும் பசந்த் பாலாஜி ஆகியோர் வழக்கை விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கொச்சி மாநகராட்சிக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று நகரசபை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தண்ணீர் பாதுகாப்பு சட்டத்தின்படியும் அவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.குப்பை கொட்டும் வாகனங்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னரே அந்த வாகனங்களை விடுவிக்க வேண்டும். குப்பைகளை ஒழுங்காக அப்புறப்படுத்தாத நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.