Sunday, June 16, 2024
Home » அறிந்த தலம் அரிய தகவல்கள்

அறிந்த தலம் அரிய தகவல்கள்

by Nithya

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கானப்பேரெயில் எனும் காளையார் கோவில்

*சிவபெருமான் காளை வடிவம் கொண்டு, கையில் பொற்செண்டும் திருமுடியில் சுழியும் கொண்டு, சுந்தரருக்குக் காட்சி தந்து, ‘‘யாம் இருப்பது கானப்பேரூர்’’ என்று கூறி ஆற்றுப்படுத்திய திருத்தலம் – கானப்பேரெயில் எனும் காளையார்கோயில்.

*சங்ககாலத்திலேயே இத்திருத்தலம் ‘கானப்பேரெயில்’ எனும் திருநாமத்துடன் விளங்கியது.

*உக்கிரப்பெருவழுதி எனும் வீரம் நிறைந்த மன்னருக்குக் கோட்டையாகத் திகழ்ந்தது இத்திருத்தலம்.

*இத்திருக்கோயிலில் மூன்று சந்நதிகள் உள்ளன.

1. காளீஸ்வரர்- சொர்ண வல்லி.
2. சோமேசர்-சௌந்தர நாயகி
3. சுந்தரேசர்-மீனாட்சி

*முதல் சந்நதி நடுவிலும்; இரண்டாவது சந்நதி வலது பக்கத்திலும்; மூன்றாவது சந்நதி இடது பக்கத்திலும் உள்ளன. இவர்களில் தேவாரப்பாடல் பெற்றவர்
காளீஸ்வரரே.

*சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் முதலானவர்களின் பாடல்களைப் பெற்ற திருத்தலம் இது.

*கோவிலின் நில புலன்கள் எல்லாம் காளீஸ்வரர் பெயரிலேயே உள்ளன.

*இங்குள்ள இந்த மூன்று சந்நதிகளை ஒட்டி வழங்கும் பழமொழி; ‘காளை தேட, சோமர் அழிக்க, சொக்கர் சுகிக்க’ என்பது.

*சொத்து முதலானவைகள் காளீஸ்வரர் பேரில் இருந்தாலும், சோமேசர் தான் திருவீதி உலா வரும் காலங்களில் உயர்ந்த ஆடைகளுடன் பற்பல ஆபரணங்கள் ஜொலிக்க திருவீதிஉலா வருவார்; பலவிதமான படையல்கள் எல்லாம் சுந்தரேசர் எனப்படும் சொக்கருக்குத்தான். அதன் காரணமாகவே அந்தப் பழமொழி உருவானது.

*அகத்தியருக்குச் சிவபெருமானே ஞான உபதேசம் செய்த திருத்தலம் இது. அதன் காரணமாக இத்திருத்தலத்திற்கு ‘அகத்திய க்ஷேத்திரம்’ என்ற திருநாமமும் உண்டு. மந்திர உபதேசம் பெற்றவர்கள் இத்தலத்தில் வந்து ஜபம் செய்தால், அது பன்மடங்காகப் பெருகும்.

*சண்டாசுரன் எனும் கொடுமையான அரக்கனை அன்னை காளி சங்காரம் செய்த திருத்தலம் இது. அதையொட்டிப் பல நிகழ்வுகள் நடந்தேறின. இந்தத் திருத் தலத்தைச் சுற்றியுள்ள ஊர்களின் பெயர்கள், அந்நிகழ்வுகளின் காரணமாகவே உண்டானவை.

*தேவர்கள் அம்பிகையைக் கண்ட இடம் – கண்டதேவி எனும் ஊர்.

*தேவி வீற்றிருக்கும்படியாகத் தேவர்களால் கோட்டை நிர்மாணம் செய்யப்பட்ட இடமே – தேவிகோட்டை.

*காளி வடிவம் கொண்ட அன்னை தவம் செய்த இடம்-தாலவனம்.

*அங்குள்ள தீர்த்தம், அம்பிகை நீராடித் தவம் செய்த தீர்த்தம்- பாற்குளம்.

*அன்னை காளி, சண்டனை வெற்றிகொண்ட இடம்-வெற்றியூர்.

*சண்டாசுரன் தேர்க்கொடி முறிந்த இடம்-கொடிக்குளம்.

*சண்டாசுரனின் சரங்(அம்பு)கள் வீழ்ந்த இடம் – சராளி; அவன் மாண்ட இடம்-மாளக்கண்டான்.

*சண்டாசுரனைக் கொன்று தங்களுக்கு அருள்புரிந்த அன்னை காளி மேல் தேவர்கள் பூமாரி பொழிந்த இடம்-பூங்கொடி.

*மேஷ மாதம்-திரயோதசி-உத்திர நட்சத்திரம்-சோமவாரத்தன்று அன்னை சொர்ணவல்லிக்கும் காளீசருக்கும் இங்கே திருமணம் நடந்தது.

*சுவர்ண காளீசர்-இடப்பாகம் சொர்ண வடிவம்; வலப்பக்கம்-கருமை வடிவம் என அமைந்த திருத்தலம் இது.

*தீர்த்த மகிமை: இங்குள்ள தீர்த்தங்கள் பல. அவற்றில் ஒரு சில: இங்குள்ள ‘சரஸ்வதி’ தீர்த்தம் என்பதில் மூழ்கி காளீசரை வழிபட்டால் கல்விச்செல்வம் பெறலாம்.

*இங்குள்ள ‘லட்சுமி’ தீர்த்தத்தில் நீராடி காளீசரை வழிபட்டால், செல்வ வசதிகள் அனைத்தையும் பெறலாம்;
வெள்ளிக்கிழமை விசேஷம்.

*பஞ்சமுக விசேஷம்: சிவ பெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்ற ஐந்து திருமுகங்கள் உண்டு. இதனால் அவர்
‘பஞ்ச முகேஸ்வரன்’ எனப்படுகிறார்.

*மிகவும் பழைமையான ‘காளையார் கோவில் தல மான்மியம்’ சிவபெருமானின் அந்த ஐந்து திருமுகங்களுக்கும் வண்ணம்-குணம்-பருவம் எனும் அற்புதமான
தகவல்கள் பலவற்றை விவரித்துள்ளது.

*காளையார் கோவில் ஆலயம்-ஊரைச்சுற்றிப் பலர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, வழிபாடு செய்திருக்கிறார்கள். அந்தத் தகவல்களைப் பழைமையான ‘காளையார் கோவில் மான்மியம்’ என்ற நூல், விரிவாகச் சொல்கிறது. அத்தகவல்கள்…

*திருமால், கண்டதேவி எனும் தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். அதற்கு ‘விண்டு வீச்சுரம்’ என்று பெயர்.

*சிருங்கபுரம் என்னும் தலத்தில், அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ‘அகத்தீச்சுரம்’ எனும் சிவலிங்கம் உள்ளது.

*வசிட்டரும் அருந்ததியும் தங்கள் பெயரால் இரு சிவலிங்கங்களைச் சோதி வனத்தில் ஸ்தாபித்தார்கள்.

*தாரகனைக் கொன்ற இடத்தில் இந்திரன் தன் பெயரால் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்தார்.

*தென்கிழக்கில் அகத்தியர் தன் பெயரால் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்தார்.

*சோதி வனத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஒரு சிவ லிங்கத்தை ஸ்தாபித்தார்.அதற்குச் சற்று தூரத்தில் லட்சுமிதேவி தன் பெயரால் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அதற்குச் சற்று தூரத்தில் அக்னி பகவான் இரு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

*வெற்றியூரில் கலைமகள் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

*பூங்குடி எனும் தலத்தில் குபேரனும் மார்க்கண்டேயரும் இரு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள்.

*காளையார் கோவிலைப்பற்றி வடமொழியில் உள்ள ஸ்காந்த புராணம், சங்கர ஸம்ஹிதை முதலான நூல்கள் பல அபூர்வமான தகவல்களை விவரிக்கின்றன.

*மருது சகோதரர்கள் தீவிரபக்தி: ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை-அட்டூழியங்களை மிகவும் தீவிரமாக எதிர்த்தவர்கள் – மருது சகோதரர்கள். இருவரும் காளையார் கோவில் ஈசரிடம் எல்லையற்ற பக்தி கொண்டவர்கள். அவர்களைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர்கள் மிகவும் திண்டாடினார்கள்.

*கடைசியில், உடன் இருந்தவர்களின் வஞ்சனையால் அச்சகோதரர்கள் மடக்கப் பட்டார்கள். ஆம்! மருது சகோதரர்களின் பக்தியை-காளையார் கோயில் ஈசரிடம் அவர்கள் கொண்ட பக்தியை அறிந்த ஆங்கிலேயர், ‘‘மருது சகோதரர்கள் உடனடியாக வந்து சரணடையா விட்டால், காளையார்கோவில் ஆலயத்தை முழுமையாகத் தரைமட்டமாக்குவோம்’’என்று அறிவித்தார்கள்.

*தகவல் அறிந்த மருது சகோதரர்கள் வந்து நிபந்தனையுடன் சரணடைந்தார்கள்; ‘‘நாங்கள் அளித்த அற-தர்மச்செயல்களை எந்தக் காலத்திலும் தடைசெய்யக் கூடாது. நாங்கள் இறந்த பின் எங்கள் உடலைத் திருப்பத்தூரிலும்; தலைகள் காளையார் கோயில் ஆலயத்தின் எதிரிலும் புதைக்கப்பட வேண்டும்’’ என்று நிபந்தனை விதித்தார்கள்.

*அதன்படியே அவர்கள் இருவரும் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட பின், அவர்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

*திருப்பத்தூரிலும் காளையார் கோவிலிலும் மருது சகோதரர்களின் சமாதிக் கோவில்களும் மண்டபங்களும் இன்றும் உள்ளன.

*தெய்வபக்தியுடன் தேசபக்தியும் உள்ளவர்கள், இன்றும் அங்கே சென்று வழிபாடு செய்து வருகிறார்கள்.

*தெய்வபக்தியுடன் தேசபக்தியிலும் சிறப்புற்று விளங்குவது-காளையார் கோவில்.

தொகுப்பு: பி.என். பிரசுராமன்

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi