டெல்லி : நிதி மோசடியில் சிக்கி சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி சிவசங்கரனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திவாலான ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி சிவசங்கரனின் ஏர்செல் அக்ஸெல் ஷைன் லிமிடெட் நிறுவனத்திற்கு 393 கோடி கோடியும் பின்லாந்தைச் சேர்ந்த வின் விண்ட் ஒய் நிறுவனத்திற்கு ரூ. 322 கோடியும் ஐ.டி.பி.ஐ வங்கி கடனாக வழங்கி இருந்தது. கடனை செலுத்தாமல் மோசடி செய்ததாக ஐடிபிஐ வங்கிக்கு ரூ.1,715 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர் பாக சிவசங்கரன் மீது கம்பெனி சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே வெளிநாடு தப்பிச் சென்ற சிவசங்கரனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் அளித்த உத்தரவாதத்தின் பேரில் வெளிநாடு செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தபோதும் அவருக்கு எதிராக வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டிஸை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் மறுத்தது.
இந்த நிலையில் தொழில் காரணமாக மீண்டும் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்குமாறு சிவசங்கரன் தொடர்ந்த வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவர் மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார குற்றச் சாட்டுகளை விசாரணை அமைப்புகள் விசாரித்து வருவதை நீதிபதி சுட்டிக் காட்டி உள்ளார். பொருளாதார குற்றங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு நவீன அச்சுறுத்தல் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.