Saturday, May 18, 2024
Home » நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார்: மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனை

நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார்: மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனை

by Arun Kumar

டெல்லி: பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்; நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார். ஒரு மனிதனுக்கு முன்னால் இவ்வளவு பலவீனமாக அரசு உள்ளதா? ஸ்ரீராமரின் பெயரில் வாக்குகள் மட்டுமே தேவை, அவர் காட்டிய பாதை என்னவானது?” பிரிஜ் பூஷனின் மகன் கரண்பூஷன் சிங், உத்தரப் பிரதேசத்தின் கைசர்காஞ் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சிட்டிங் பாஜக எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது. ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தான் ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில், “நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார்.
நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை, நீதியை மட்டுமே கோருகிறோம்.

கைது செய்வதை விடுங்கள், இன்று பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட்டு கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள். ஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டும் சீட்டு கொடுக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு முன்னால் இவ்வளவு பலவீனமாக நம் அரசு உள்ளதா? ஸ்ரீராமரின் பெயரில் வாக்குகள் மட்டுமே தேவை, அவர் காட்டிய பாதை என்ன? என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

You may also like

Leave a Comment

five − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi