குமரி: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனிடம் 2 மணி நேரம் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் பகுதியை சேர்ந்த கனல் கண்ணன் பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளராக இருக்கிறார். மேலும் இந்து முன்னணியின் கலைஇலக்கிய மாநில செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரின் சமூக வலைத்தளத்தில் கிறிஸ்துவ மத பாதிரியார் தொடர்பாக பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு மத பிரச்சனையை தூண்டுவதாக அமைந்துள்ளதாக கூறி நாகர்கோவில் சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கனல்கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கனல்கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர்கிரைம் பிரிவில் வரவழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரிடம் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் 2 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு வந்த கனல் கண்ணனை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம்சாட்டி கனல் கண்ணனுக்கு ஆதரவாக, போலீசாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.