சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் தனியார் மருத்துவமனையில் திருமாவளவன் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர், சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் சிறப்பு ரயிலுக்கான சிறப்பு நிகழ்ச்சி, காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பில் நேற்று நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் என்று அடுத்தடுத்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றிருந்தனர்.
இதனால் அவருக்கு நேற்று திடீரென உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. உடனடியாக திருமாவளவன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. காய்ச்சல் காரணமாக மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. தற்போது, ரத்த பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசிக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமாவளவனை சந்திக்க கட்சி நிர்வாகிகள், தோழர்கள் யாரும் 30ம் தேதி வரை சென்னைக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.