சேலம்: அப்பா திரைப்படத்திற்கு வரிவிலக்கு பெறுவதற்காக பணம் கொடுத்ததாக நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அப்பா. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், சேலத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நடிகர் சமுத்திரக்கனி அப்பா திரைப்படத்திற்கு வரிவிலக்கு பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும், அரசே எடுக்க வேண்டிய படத்தை தான் செலவழித்து எடுத்தும் வரிவிலக்கு பெறுவதற்கு பணம் கொடுத்தது வருத்தம் அளிக்கிறது என்றார். ஆனால், சென்சார் போர்டுக்கு இதுவரை பணம் ஏதும் கொடுத்ததில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். காவிரிக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் அதே நேரத்தில் தனி மனிதனாக எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.