பெங்களூரு: கர்நாடக ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் ஹாவேரியில் நிருபர்களிடம் கூறியதாவது: ‘2015ம் ஆண்டுக்கு முன் மற்றும் பின் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையை பாருங்கள். உண்மையாகவே என்ன நடக்கிறது என்று தெரியும். 2015ம் ஆண்டுக்குபின் காங்கிரஸ் அரசு விவசாயி தற்கொலைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியது. அதன்பின்னர் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவிட்டது. இழப்பீடு பெற முயல்வது மனித இயல்பு. ஏழை மக்கள் இதுபோன்று விஷயங்களை காட்டி பணம் பெற முயற்சிக்கின்றனர். உண்மையாகவே கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
2020ம் ஆண்டு 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். 2021ம் ஆண்டு 595 பேரும், 2022ம் ஆண்டு 651 பேரும் தற்கொலை செய்துகொண்டனர். 2023ம் ஆண்டு இதுவரை 412 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் தான் உண்மையான தற்கொலைகள் எத்தனை என்பது தெரியவரும். ரூ.5 லட்சம் இழப்பீடாக அரசு கொடுக்க தொடங்கியதிலிருந்து தற்கொலைகள் அதிகரித்துவிட்டன’ என்றார். அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சை விவசாய சங்கங்கள் கண்டித்துள்ளன. அமைச்சர் பதவியில் இருந்து சிவானந்தபாட்டீலை நீக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.