Saturday, May 18, 2024
Home » வேளாண் வணிகத் திருவிழா 2023.. ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

வேளாண் வணிகத் திருவிழா 2023.. ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

by Porselvi

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.7.2023) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா 2023-யை தொடங்கி வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார்.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை இவ்வரசு ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றது. மாநிலத்தின் பொருளாதாரம் வளரும்போது விவசாயிகளின் வாழ்வும் அதே அளவு வளர்ந்து செழிக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.

மாநில அளவில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி : வேளாண்-உழவர் நலத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பு

2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில், மாநில அளவில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான (Farmer Producer Organisation) கண்காட்சி சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் என்பவை வேளாண் தொழிலை அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கும், விவசாய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வணிகப்படுத்துதலுக்கும் அடித்தளமாக அமைந்து வருகின்றன.

முதலமைச்சர் அவர்களால் வேளாண் வணிகத் திருவிழா தொடக்கம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வணிக ரீதியாக இலாபகரமாக இயங்குவதற்கு, தமிழ்நாடு அரசு பயிற்சியும், நிதிஉதவியும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேளாண் வணிகத் திருவிழா-2023 சென்னை வர்த்தக மையத்தில் இன்று (08.07.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

கண்காட்சி அரங்குகளின் விவரங்கள்

இவ்வேளாண் வணிகத் திருவிழாவில் 176 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்களும், 90 அரங்குகளில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), நபார்டு வங்கி (NABARD), தொழில் முனைவோர்கள், பிற மாநிலங்களில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் போன்ற பல்வேறு அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வரங்குகளில் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், பனை சார்ந்த பொருட்கள், நறுமணப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள், சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்கள், உடனடியாக சமைக்கும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விளைபொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு விருதுகள்

இவ்விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ”ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருதினை” புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், ஈரோடு – கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், “வர்த்தகத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருது” கடலூர் மாவட்டம், மங்களுர் தானியப் பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், சேலம் – வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2022-23ஆம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த விவசாயி திரு.ம.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு விருதும், இரண்டு இலட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

முக்கிய தலைப்புகளில் கருத்தரங்குகள்

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிகம் குறித்த விழிப்புணர்வையும் தொழில் வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தகவல்களை பெறுவதற்காக துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.

வேளாண் வணிகத் திருவிழாவில் இன்றைய தினம் மாலை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை திறமையான முறையில் நிர்வகித்தல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான நிதிஉதவித் திட்டங்கள் தொடர்பான கருத்தரங்குகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடைய உள்ளனர். அதைத் தொடர்ந்து நாளை (9.07.2023) அறுவடைக்குப் பின் மேலாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகள், வெற்றிபெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடந்து வந்த பாதை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகளும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் பொருட்களின் விற்பனையினை எளிதாக்கும் வகையில், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பும் (Buyers-Sellers Meet) நடைபெற உள்ளது. இவ்வேளாண் வணிகத் திருவிழாவில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைவர்.

You may also like

Leave a Comment

thirteen + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi